மும்பை:-
சிறப்பு நீதிபதி வி.சி.பார்டே நீரும் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அனுமதி அளித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கை அவர் சந்தித்து வருகிறார்.
மும்பை சிறப்பு கோர்ட்டு நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து உள்ளது.
இந்தநிலையில் மும்பை சிறப்பு கோர்ட்டில் நிரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.சி. பார்டே பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைக்கப்படாத (Not Mortaged), ஈடாக வைக்கப்படாத (Not Hypothecated) நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.
ஒரு மாதத்துக்குள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி சட்டத்தின் (Fugitive Economic Offenders Act) கீழ் நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் FEO சட்டத்தின் செக்சன் 12 (2) மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட உள்ளது. FEO சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2018) இணைத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி நாட்டிலேயே முதன்முறையாக தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.