புதுடெல்லி
திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி மூலம் வழங்கி பாராட்டினார்.
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 தேதியன்று தேசிய ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இன்றைய தினமும் காணொளி வாயிலாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தபடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 2 நபர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி வாயிலாக தற்போது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த விருது என்பது காணொளி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு இந்த விருதுகளை பெற்றுள்ளனர். காணொளி வாயிலாக விருது வழங்கப்படும் போது விருது பெரும் ஆசிரியர்களின் புகைப்படம் திரையில் காட்டப்படும். அவர்களுக்கான சான்றிதழும் திரையிடப்படும்.
இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறப்பு ஊக்கத்தொகை என்பதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.