புதுடில்லி :
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நவீன வளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டது. இதன் முதல்கட்டமாக பல்வேறு உள்நாட்டு மற்று வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் இணைந்து, ‘இஸ்பா’ எனப்படும் இந்திய விண்வெளி சங்கம் துவங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களான லார்சன் அண்ட் ட்யூப்ரோ, டாடா குழுமத்தின் நெல்கோ, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒன் வெப், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளன. இதன் துவக்க விழா புதுடில்லியில் நடைபெற்றது.
விண்வெளி துறையில் தனியார் பங்கேற்கும் விதமாக, பல்வேறு பெரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து துவங்கப்பட்டுள்ள, ‘இஸ்பா’ எனப்படும், இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது எந்தெந்த துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் தேவை இல்லையோ, அதை தனியாருக்கு திறந்து விடுவதே மத்திய அரசின் கொள்கை. அந்த அடிப்படையில் தான் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த, ‘ஏர் – இந்தியா’ நிறுவனம் தனியாருக்கு வழங்கப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய நலனை மனதில் வைத்தே, விண்வெளி துறை முதல் ராணுவம் வரை, மத்திய அரசு தனியாரை ஈடுபடுத்த துவங்கி உள்ளது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் குறிக்கோள் மிக தெளிவாக இருப்பதால் அனைத்து துறைகளிலும் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை காண முடிகிறது.
விண்வெளி துறையில் தனியாரை ஈடுபடுத்துவதில், நான்கு முக்கிய கொள்கைகளில் அரசு உறுதியாக உள்ளது. தனியார் துறையின் புதுமைகளை அனுமதிப்பது, அதை செயல்படுத்துபவராக அரசு இருப்பது, இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார் செய்வது, சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை உருவாக்குவது ஆகியவை முக்கியம். இதில் அரசு சமரசம் செய்யாது என பிரதமர் தெரிவித்தார்.