கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியும் பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 15 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதிகளவில் மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நெற்பயிர்கள் மழையில் மூழ்கி நாசமாகியுள்ளன.
மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, .
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள், 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த 25 வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.
மேலும், இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு கேட்கப்படும்.
கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு 10 ஆயிரமும், ஆடுகளுக்கு 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும். கனமழையால் சேதமடைந்த சாலைகளை செப்பனிட ரூபாய் 100 கோடிக்கு மேல் டென்டர் விடப்பட்டுள்ளது. மழை காலம் முடிந்த பின் சாலைகள் முழுவதுமாக செப்பனியிடும் பணி தொடங்கும் என்று கூறினார்.