இளைஞர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தடைந்த மாற்றுத்திறன் சைக்கிள் பயணிகளை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்றும், எனவே இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்த அவர், சில மாநிலங்களில் படுக்கை வசதி இன்றி, ஆக்சிஜன் இன்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்றும், அப்படிபட்ட சூழ்நிலை மக்களுக்கு வரக்கூடாது என்பதால் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், மருந்து தட்டுப்பாடு என சில அரசியல் தலைவர்கள் அறிக்கை கொடுப்பதாகவும், பொதுமக்களுக்கு அச்சத்தை தவிர்த்து தைரியத்தை அரசியல் கட்சியினர் கொடுங்கள் என கோரிக்கை வைத்தார்.