பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.
முன்னதாக, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நானும், எனது தந்தையும் ராஜ்பவன் செல்கிறோம். அப்பா பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இனி எங்கள் குடும்பத்தின் தலைவராக எங்களை வழிநடத்துவார்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று முற்பகலில் அமரீந்தர் சிங், சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இதனால், அமரீந்தர் சிங் ராஜினாமா செய்யலாம் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே சில ஆண்டுகளாகவே மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிப்பதற்கு அமரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாநில முதல்வரின் எதிர்ப்பை மீறி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஒப்புதலுடன் சித்து நியமிக்கப்பட்டார்.
மேலும், அமைச்சராக இருந்த போதே நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனால் இருவருக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. சித்து ராகுல் காந்தி டீமை சேர்ந்தவர் என்பதால், அந்த பலத்தில் அமரீந்தர் சிங்குடன் கரடு முரடான போக்கை கடைப்பிடித்து வந்தார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்ற கேப்டன் அமரீந்தர் சிங்கின் பேச்சை மீறி சித்து கலந்து கொண்டார், இதனால் இவர்களின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
பஞ்சாப் மக்கள் செல்வாக்கைப் பெற்ற அமரீந்தர் சிங் ராஜினாமா செய்திருப்பது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். இதனால், அங்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்படுமா? அல்லது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற சுனில் ஜாக்கர் பஞ்சாப் முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.