சென்னை :
வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு ‘புரேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்து மன்னார் வளைகுடாவிற்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 4-ம் தேதியன்று குமரி – பாம்பன் இடையே ‘புரேவி’ புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.