டேராடூன் :
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வரான திரிவேந்திர ராவத், கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். பா.ஜ.க MLA-க்கள் சிலர் முதல்வரின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததையடுத்து, மாற்றத்தை தலைமை விரும்பியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். பாராளுமன்ற உறுப்பினரான அவர், முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
கொரோனா காரணமாக தேர்தல் நடத்த முடியாத சூழல் இல்லாததால், முதல்வர் பதவியில், தீரத் சிங் ராவத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கட்சி மேலிட உத்தரவை ஏற்று தீரத் சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்தார்.இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பா.ஜ.க MLA-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி (45) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உத்தரகாண்டின் கட்டிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறுகிறது. அப்போது, மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் 4 மாதங்களில் மூன்று முதல்வர்களை பெற்றுள்ளது உத்தரகாண்ட்.உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.