புதுடெல்லி
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர்.என்.ரவி தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவி. இவர் கேரள மாநில கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர். 1976ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி. கேரளாவில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆர்.என்.ரவி. 2012 இல் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார். அவர் 2014 முதல் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தார். இதைத்தொடர்ந்து 2018 அக்டோபர் மாதம் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2015 இல் நாகலாந்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் இவரது பணி காலத்தில் தான் நடந்தது.
நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு ஜுலை 20தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார் . கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வந்த ஆர.என்.ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர் தொடர்ந்து அந்த மாநில பொறுப்பில் தொடருவார் என்றும் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.