புதுடில்லி :-
நேரடியாக ஆஜராகாமல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ‘ஆன்லைன்’ வாயிலாக ஆஜராகும் தம்பதியின் திருமணத்தை பதிவை செய்யலாம்’ என, டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஹிந்து முறைப்படி 2001ல் திருமணமானது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ எனப்படும் நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்காக திருமணப் பதிவு சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக அந்த தம்பதி விண்ணப்பித்தனர். நேரில் ஆஜராகாமல் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ஆன்லைன் வாயிலாக ஆஜராக அந்த தம்பதி அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த, நீதிபதி ரேகா பாலி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கும் சட்டம் டெல்லியில் 2014ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பலன்கள் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம். தம்பதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற சட்டப் பிரிவை காரணம் காட்டி, திருமணத்தை பதிவு செய்யும் உரிமையை பறிக்கக் கூடாது.
தற்போது உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப புதிய வசதிகளையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக நேரில் ஆஜராக தம்பதிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
அதற்கு முன், உரிய விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை தங்கள் வழக்கறிஞர் அல்லது பிரதிநிதிகள் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். சாட்சிகள் நேரில் ஆஜராக வேண்டும்.அவ்வாறு செய்யும்போது, அந்த தம்பதி எந்த நாட்டில் இருந்தாலும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.