உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) விகாஷ் என்பவர் சிக்கன் ரைஸ் மற்றும் பெப்பர் சிக்கன் காம்போ ஆர்டர் செய்துள்ளார். ஆனால் சிக்கன் ரைஸ் மட்டும் வரவே ஆன்லைனில் அதுகுறித்துப் புகார் எழுப்பியுள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட நபர் நீண்ட நேரமாகியும் அதற்கு பதிலளிக்கவில்லை
அந்த ஆர்டரில் பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “இந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.
மேலும் புகாரையும் சரிவரத் தீர்த்து வைக்காமல் பணத்தையும் ரீஃபண்ட் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து நேரடியாக சொமாட்டோவில் புகாரை எழுப்பினார் விகாஷ். இதற்கு இன்னும் சொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.
இதை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். தமிழகத்தில் தொழில் செய்யும் சொமாட்டோ நிறுவனம் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.
மேலும், சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், சொமாட்டோவின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.
இதுகுறித்து சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம் என்று மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் செண்ட்டர் / சர்வீஸ் செண்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம் என்றும் கூறியுள்ளது.