திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய இளைஞர் விடுதலையானதை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், குறும்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கிருபானந்தன் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைதான கிருபானந்தன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம், நாடு முழுவதும் முடி திருத்தும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.அதன் படி நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள 10 லட்சம் சலூன் கடைகள் மூடப்பட உள்ளன.
இது குறித்து பேசிய மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.கே.ராஜா, சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் மிகப்பெரிய சலூன் கடைகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.