காந்திநகர்:-
குஜராத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸின் முழு ஜீனோம் வரிசைகளை டிகோட் (De-Code) செய்து சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஆய்வில் புதிய திருப்புமுனையாக குஜராத் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (Gujarat Biotechnology Research Centre) ஆய்வாளர்கள் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் கோவிட்-19 ஜீனோமை வரிசைப்படுத்தி (Genome Sequencing) உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் ஜீனோமை வரிசைப்படுத்துவதன் மூலமாக அந்த உயிரினத்தில் DNA- வரிசைப்படுத்த முடியும். இந்தக் கொடிய கொரோனா வைரஸ்-ன் ஜீனோம் வரிசையை கண்டுபிடிப்பதற்காக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலமாக அதன் ஜீனோம் வரிசை படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்கு குஜராத் மாநில முதலமைச்சர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது:-
கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக நாட்டிலேயே முதன்முறையாக குஜராத் உயிர் தொழில்நுட்ப ஆய்வு மைய ஆய்வாளர்கள் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் ஜீனோம்களை வரிசைப்படுத்தி உள்ளனர். இதன் மூலமாக இந்த வைரஸின் தோற்றத்தை கண்டறிய முடியும். மேலும் இந்த வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதில் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) இந்தியாவில் உள்ள Indian Flying Fox மற்றும் Rousettus ஆகிய இரண்டு வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. இதன் மூலமாக எதிர்காலத்தில் இது போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதை கண்காணிப்பதற்கும், தடுப்பதற்க்கும் வசதியாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளது
தற்பொழுது வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.