பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.
வானிலை சீரடையாத போது சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு அவர் செல்வார் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தேவைப்படும் பஞ்சாப் காவல் துறையின் தலைமை இயக்குனரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டபின் அவர் சாலை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.
பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும். மேலும் அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டு பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பின் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.