நொய்டா:-
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு (75) சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகும். இந்நிறுவனத்தை சிவநாடார், அஜய் சவுத்ரி, அர்ஜுன் மல்ஹோத்ரா மற்றும் ஐந்து நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதே வேளையில், சிவ நாடார் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை வியூக வடிவமைப்பாளர் (Chief Strategy Officer) என்ற புதிய பொறுப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் செயல்படுவார். இதுநாள் வரை, ரோஷினி நாடார் ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். சென்னையில் உள்ள சிச சுப்ரமணிய நாடார் (SSN) இன்ஜினியரிங் கல்லூரியை நடத்தி வரும் சிவநாடார் அறக்கட்டளையில் உறுப்பினராவும் ரோஷினி நாடார் உள்ளார்.
கடந்த 2019- ம் ஆண்டு IIFL Wealth Hurun India வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் ரோஷினி நாடார் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 31400 கோடி ஆகும். கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில் தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார்.
டெல்லியில் பிறந்த ரோஷினி, வசந்த் வேலி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் கெல்லாக் மேலாண்மை பள்ளியில் (Kellogg School of Management) எம்.பி .ஏ பட்டம் பெற்றவர். 38 வயதாகும் ரோஷினியின் கணவரின் பெயர் ஷிக்தர் மல்கோத்ரா. இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
பிசினஸ் தவிர பெண்கள் மேம்பாடு, வனஉயிர் பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ரோஷினி நாடார்.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் கடந்த ஏப்ரல் ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16,425 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மொத்த உருவாய் 9 சதவீதம் அதிகரித்து 17,841 கோடியாக உள்ளது.