மும்பை….
தினசரி வானிலை அறிக்கை போன்று ‘ரியல் ஹீரோ’ சோனு சூட் செய்து வரும் உதவிகள் தினசரி செய்தியாகி வருகிறது.
ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்த ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப உதவினார்.
ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் பசியைப் போக்க தனது அறக்கட்டளை மூலமாக தினசரி உணவு வழங்கி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தொழிலாளி ஒருவர் தனது குழந்தைகளில் ஆன்லைன் கல்விக்காக ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருந்த பசுமாட்டை விற்றார். இது பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதை பார்த்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவும் பசுமாட்டை மீட்டு கொடுக்கவும் முன்வந்தார். இதையடுத்து அவருக்கு முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனுப்பப்பட்டன. அந்த ஏழை குடும்பத்துக்கு சோனு சூட் உதவி செய்தார்.
ஆந்திராவில் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு உடனடியாக டிராக்டரை அனுப்பி வைத்தார். இதனை கண்ட ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நெகிழ்ந்து போய் சோனு சூட்டுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
அடுத்த உதவியாக லாக் டவுனால் வேலையிழந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியரான சாரதா என்ற பெண் காய்கறி வியாபாரம் செய்து வந்த செய்தி கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து உடனடியாக சோனு சூட் தனது குழுவினரை அனுப்பி, அந்தப் பெண்ணுக்கு புதிய கம்பெனி ஒன்றில் இன்டர்வியூ நடைபெற ஏற்பாடு செய்து பணி நியமன உத்தரவையும் பெற காரணமாக இருந்துள்ளார்.
சோனு சூட்டின் இந்த நெகிழ வைக்கும் உதவிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.