மும்பை:-
மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் வேலையை இல்லாத காரணத்தால் பலர் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளித்து வருகிறார். மும்பை மாநகராட்சியுடன் இணைந்து அந்தேரி, ஜூஹூ, பாந்திரா, ஜோகேஸ்வரி ஆகிய பகுதிகளில் இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்தக் கடினமான நேரத்திலும் தங்குவதற்கு வீடும் உணவும் நமக்குக் கிடைத்துள்ளது. ஆனால் பல நாள்களாக உணவு கிடைக்காமல் பலர் சிரமப்படுகிறார்கள். எனவே எனது தந்தை பெயரில், சக்தி அன்னதானம் என்கிற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளேன். இதன்படி மக்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கி வருகிறேன். என்னால் முடிந்தவரை பலருக்கு உதவ வேண்டும் என்பதே என் எண்ணம் என்று கூறியுள்ளார்.
இதேபோல, கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மும்முரமாக பணி செய்து வரும் நிலையில், ஜூஹூவில் உள்ள தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் தங்கி ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ள நடிகர் சோனு சூட் வழங்கியுள்ளார்.