லடாக்:
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களிடையே கடந்த ஜூன் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இரு நாடுகளும் தங்களது எல்லைகளில் படைகளை குவித்துள்ளன.போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய கடற்படையின் சிறப்பு பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். கடற்படையின் சிறப்பு பிரிவான மரைன் கமாண்டோஸ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும், லடாக்கின் சீதோஷன நிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.