கொச்சி:-
பல்வேறு முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்கள் என ISO தரச்சான்று பெற்றுள்ள நிலையில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா கரோத்துக்குளி மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனர் ஸ்ரீகாந்தும் அவரது Hello Buddy ஆட்டோவும் மிகவும் பிரபலம். பெரும்பாலான தொலைதூர சவாரிகள் மற்றும் விமான நிலைய சவாரிகளின் முதல் சாய்ஸாக உள்ளவர் ஸ்ரீகாந்த்.
ஏன் ஸ்ரீகாந்த் இத்தனை பிரபலம் என்றால் அவரது ஆட்டோவில் பயணிகளுக்கு இலவச வை-ஃபை வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் கேமரா மற்றும் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நாளிதழ்கள் எனப் பல்வேறு வசதிகளை அதில் சவாரி செய்யும் பயணிகளுக்கு அளித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
மேலும் தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு சொகுசான பயணத்தை தர வேண்டுமென்பதற்காக ஆட்டோ சீட்டுகளுக்கு பதிலாக கார் சீட்டுகளை பயன்படுத்துகிறார் ஸ்ரீகாந்த்.
இது குறித்து கூறும் ஸ்ரீகாந்த்:-
மருத்துவமனைகளில் இருந்து வரும் நோயாளிகள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பும்பொழுது சாதாரண தள்ளாடும் ஆட்டோக்களில் அசௌரிக பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதற்காகவே இது போன்ற வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகிறார்.
ஒரு விபத்தால் ஏற்பட்ட மாற்றம்:-
ஐடிஐ படிப்பை முடித்தபின் ஸ்ரீகாந்த் பல இடங்களில் வேலை தேடி உள்ளார். ஒரு நாள் ஸ்கூட்டரில் செல்லும் பொழுது விபத்தில் சிக்கியுள்ளார். இதற்கு எடுத்துக் கொண்ட மருந்துகளால் இவரது எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இவரது கால்கள் 60% முடங்கிப் போனது.
பின்னர் மருத்துவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் ஸ்ரீகாந்த். அச்சமயம் தனது வீட்டில் இருந்து மருத்துவமனை நீண்ட தூரம் என்பதால் பயணம் செய்வது அவருக்கு பெரும் அசௌகரியத்தை அளித்துள்ளது. இதனால் கால்கள் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு கடைசியாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்பு ஓரண்டு கழித்து ஓரளவு குணமடைந்து மீண்டு வந்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அவர் மருத்துவமனையில் பார்த்து வந்த வேலை பறிபோனது. இவருக்கு உறுதுணையாக இருந்தது இவர்களது பெற்றோர் தான். இவரது தந்தை ஆனந்த் நாயக் (Rtd superintendent of the Public Services Department) மற்றும் இவரது தாயார் சியாமளா தேவி (Rtd Assistant Controller of the agricultural university).
கடைசியாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆட்டோ வாங்க கூறி யோசனை தெரிவித்தார்கள். பின்னர் தான் எனது இந்த Hello Buddy ஆட்டோவை வாங்கினேன். இப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
பணத்திற்காக நான் கஷ்டப்பட்ட காலத்தில் பல்வேறு நபர்கள் எனக்கு உதவியாக இருந்தார்கள், தற்பொழுது இது எனக்கான நேரம் நான் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
தற்பொழுது ஸ்ரீகாந்திற்கு நிலையான வருமானம் வருகிறது. அதோடு நாட்டிலேயே முதலாவது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற ஆட்டோ ஓட்டுனர் என்ற அங்கீகாரம் வேறு. வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த்.