மூடுபனி காலங்களில் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கி உள்ள நிலையில்,
இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்துவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது எனவும் லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக்கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.