டெல்லியில் 11 வயது மாணவி சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியதால் கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் பயின்று வரும் 11 வயது மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் 2 சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார். இதனையடுத்து அந்த 2 சீனியர் மாணவர்களிடம் அந்த மாணவி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த அந்த இரு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல் மாணவியை பள்ளிக்கூட கழிவறைக்கு இழுத்து சென்று கழிவறையை உள்பக்கமாக பூட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறி இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. பள்ளி கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூர சம்பவம் கடந்த ஜூலை மாதம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் இந்த புகார் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. பள்ளிக்கூட கழிவறையில் மாணவி சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்தது ஏன்? என்றும் இது தொடர்பாக ஏன் புகார் அளிக்கவில்லை? என்பது குறித்தும் கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள், சம்பவத்தை மறைத்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தெரியாமல் இடித்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்களால் பள்ளி கழிவறைக்கு இழுத்து சென்று மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் டெல்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.