உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிகள் இடம்பெற்ற சுவரொட்டிகள் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் முசாபர் நகரில் அதிர்ச்சி தரும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் இருக்கும் சுவரொட்டியில் தங்களது சேவைக்கான கட்டணங்கள் என குற்றச்சம்பவங்களை செய்வதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் ஒருவரை மிரட்டுவதற்கு ரூ.1000 வசூலிக்கப்படும் எனவும், எவரையேனும் தாக்குவதற்கு ரூ.5 ஆயிரம் எனவும், காயம் ஏற்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வதற்கு ரூ.55 ஆயிரம் வரை சேவைக் கட்டணமாக பெறப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இதையடுத்து அந்த இளைஞர் சரதவல் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார்.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.