பாலக்காடு:
பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (40). இவருடைய மனைவி சபிதா (38). இவர் அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இவர்ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் ஆமிலின் (6). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று காலையில் பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட சபிதா, தனது 3-வது மகனை கொலை செய்துவிட்டதாகவும், அவனுடைய உடல் குளியலறையில் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் உடனடியாக சபிதா வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் சபிதா அமர்ந்து இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்கு போலீசார் சென்றபோது அங்கு சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான்.
உடனே போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சபிதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரே தனது மகனை நரபலி கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் கூறியதாவது,சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். அவருக்கு தெய்வதோஷம் இருப்பதாகவும், அதற்கு 3-வது மகனை நரபலி கொடுத்தால் அந்த தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாக கனவு வந்துள்ளது.எனவே அவர் தனது 3-வது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது 3-வது மகன் அருகே சென்றார். அப்போது அவன் தூங்கிக்கொண்டு இருந்தான். உடனே அவனுடைய கை மற்றும் காலை கட்டினார். பின்னர் அவன் சத்தம் போடுவதை தடுக்க வாயில் துணியை திணித்து உள்ளார்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்று, சமையல் செய்யும் கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று, மகன் என்றும் பாராமல் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகனின் கழுத்தை அறுத்தார்.இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆமிலின் பரிதாபமாக இறந்தார். ஆனால் மகன் இறந்த மறு நிமிடத்தில் உயிரோடு வருவதாக கனவு அவருக்கு ஏற்கனவே வந்து இருந்தது. ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் இறந்த மகன் உயிரோடு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனை கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான் அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு யாராவது ஜோதிடம் சொன்னார்களா???? அதை நம்பிதான் அவர் தனது மகனை கொன்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.தனக்கு தோஷம் நீங்குவதற்காக மகனை, பெற்ற தாயே நரபலி கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.