கூடங்குளத்திலேயே அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 6 அணு உலைகள் அமைக்க இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை எங்கே சேமித்து வைப்பது என்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகரான அப்பாவு கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தொகுதியின் உறுப்பினராவார். அவர் மத்திய அரசு, இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்