ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா இன்று மாட்டு சாணத்தை கதிர்வீச்சு எதிர்ப்பு பொருள் என்று வர்ணித்து, மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்
பசுக்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு, மற்றும் கால்நடை மேம்பாட்டு திட்டங்களை வழிநடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் “ராஷ்ட்ரிய காமதேனு” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது.தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் வரிசையாக வர உள்ள நிலையில், மாட்டு சாணம் தயாரிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காமதேனு தீபாவளி அபியான் என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை நேற்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா நேற்று வெளியிட்டார்.
அப்போது மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் மாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மண் விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள் ஆகியவை இதில் அடங்கும்.ஆனால் இதையெல்லாம் விட வேறொரு தயாரிப்பு தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது ‘கதிர்வீச்சு எதிர்ப்பு சிப்’ ஆகும்.
‘மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும். இது கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கதிர்வீச்சு எதிர்ப்பு சிப் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும்’ என்று அவர் சிப்பை அறிமுகப்படுத்தி கூறினார்.
இந்நிலையில் மாட்டுச் சாணத்திலிருந்து கதிர்வீச்சுக்களை எதிர்க்கும் சிப்பா??? என நெட்டிசன்கள் இது குறித்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.