தெலுங்கானாவில் பணி முடிந்து வீடு திரும்ப ஊழியர் ஒருவர் அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து பயணங்களை நாம் எதிர்கொள்ளும் போது சில சமயங்களில் நம்மை காக்க வைக்கும் பேருந்துகளை பார்த்தாலோ, அல்லது, செல்லும் இடங்களுக்கு மெதுவாக சென்றாலோ, நமக்குள் ‘பேசாமல் நாமே இந்த பஸ்ஸை ஓட்டியிருந்தா சீக்கிரமா போயிருக்கலாம்ன்னு’ தோணும்.
அப்படி ஒரு சம்பவம் தெலுங்கானாவில் விகாராபாத் பகுதியில் நிகழ்ந்துள்ளது. பணி முடிந்து வீடு திரும்பிய நபர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க, நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை. இதனால் கடும் கோபமடைந்தார் அந்த நபர்.
உடனடியாக அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நிறுத்தியிருந்த மாநில அரசு பேருந்தை தானே ஓட்டிச்சென்றுள்ளார். செல்லும் இடம் வந்தவுடன் அங்கேயே பேருந்தை நிறுத்தி சென்றுள்ளார்.
பேருந்தை காணவில்லை என போலீசுக்கு புகார் செல்ல, விசாரணையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.