புதுடில்லி-
பொது இடங்களில் சளித் திவலைகளைத் துப்புவதும், குட்கா மற்றும் பான் மசாலாக்களைப் போட்டுவிட்டு துப்புவதும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளபோது அது பலவகைகளில் சமூகத்துக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக பல பாதிப்புகளை உண்டாக்கும்.
எச்சில் துப்புவது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு செயலாகிவிட்டது. சில நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவது பெரும் தண்டனைக்குரிய செயலாகும். அபராதங்களில் தொடங்கி சிறைத் தண்டனைகள் வரை எச்சில் துப்புபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆனாலும் பொது இடங்களில் எச்சில் துப்புவதை கட்டுப்படுத்த இயலாத நிலையே உள்ளது.
ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் எச்சில் துப்புவதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த ‘ஈஸி ஸ்பிட்’ என்ற நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
ரயில் நிலையங்களில் எச்சில் துப்புபவர்களுக்காக பாக்கெட் அளவிலான சிறிய பைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் இருந்து இந்த பைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பைகளுக்குள் ஒருவர் 15 – 20 முறை எச்சில் துப்ப இடம் உள்ளது. அந்த எச்சிலை உறிஞ்சும் விதமாக பைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எச்சிலில் உள்ள கிருமிகள் வெளியே பரவாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைகள் மக்கும் தன்மை உடையவை. இதை மண்ணில் வீசினால், அதில் கலந்துள்ள விதைகள் மரங்களாக முளைக்கும் தன்மை உடையது.
பாக்கெட் அளவிலான ஒரு பைக்கு, 5 – 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தியா முழுமைக்கும் முக்கியமான ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவ ஏற்பாடுகள் நடந்து வருவதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.