கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ50,000 வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, மத்திய-மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருப்பதாலும், நிதி பற்றாக்குறையாலும் கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா, ஏ.எஸ் போபண்ணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.50ஆயிரத்தை மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது, என தெரிவித்தார்.
அதனையடுத்து நீதிபதிகள், “கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ50,000 வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் கொரோனா என குறிப்பிடப்படாவிட்டால் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது. இறப்புக்கான காரணத்தை சரியாக பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டு தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், அத்தொகை இறந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்