புது டெல்லி :
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு உள்பட 5000 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டடுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ஏஐசிசி பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கன் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தடுத்துவிடலாம் என்று பிரதமர் மோடியின் எண்ணம் பலிக்காது என்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் பக்கங்களை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்பட வைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.