பெண்களும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேரலாம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புப் படைக்கு பெண் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக தனித்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் தங்களை பர்மெனன்ட் கமிஷனுக்கு தேர்வு செய்யாமல், ஷார்ட் கமிஷனுக்கு தேர்வு செய்துள்ளது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய ராணுவப்படையில் பெண்களையும் சேர்க்க வேண்டும். பெண்களின் உடலியல் வரம்பைக் காரணம் காட்டி, பெண்களை ஒதுக்குவது பாலின சமத்துவத்துக்கு எதிரானது, எனவே இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்திற்கு, பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெண்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நீதிபதிகள் பத்து நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க அனுமதி வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீர்திருத்தம் என்பது ஒரே நாளில் நடைபெறுவது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருக்காமல் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்