இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு என அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும் அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய முன்னதாக அவர்கள் பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சரத்மோன் மற்றும் அவரது தாயார் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் (ஏப்ரல் 25) திருமணம் செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை, மணப்பெண் அபிராமி அதிகாரிகளின் வழிக்காட்டுதல்படி கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணம் செய்துகொள்ள அரசு தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை அபிராமி திருமணம் செய்துகொண்டார்.