6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தாலும் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக அளவில் காணப்பட்டது. உண்மையில், 2-வது அலை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.
மக்கள் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். இதனால்தான் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில சமயங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்று ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.