ஆக்ரா:-
கனமழையின் போது ஏற்பட்ட பலத்த இடியால் தாஜ்மஹாலில் உள்ள பிரதான கல்லறை சேதமடைந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உலக அதியங்களில் ஒன்றான தாஜ்மஹால் சில சேதரங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த காற்றால் தாஜ்மஹாலில் இரண்டு 12 அடி உயர தூண்கள் கீழே விழுந்து உடைந்து சேதமானது.
இடியுடன் கூடிய கனமழையால் பிரதான கல்லறை, சிவப்பு பளிங்கு கல் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள சில மரங்கள் சாய்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே, மெயின்புரி, ஆக்ரா, லக்கிம்பூர் கிரி மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் உயிர் இழந்தோருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1631 ஆம் ஆண்டு இறந்த தனது காதல் மனைவி மும்தாஜ்-காக முகலாய அரசர் ஷாஜகான் கட்டியது தான் இந்த தாஜ்மஹால். இது காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வரும் அயல்நாட்டு தலைவர்கள் தாஜ்மஹாலுக்கு அழைத்துச் செல்லப்படுவது காலங்காலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது.