திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் பாறை விழுந்தது.
அந்த வழியே சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் சத்தம் கேட்டு உடனடியாக பிரேக் போட்டு பின்னால் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதற்காக 2 மலைப் பாதைகள் உள்ளன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 2வது மலை பாதையும்; திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர முதல் மலைப்பாதையும் உள்ளது.
இந்நிலையில், 2வது மலைப் பாதையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டு இருந்த போது, முக்காளமிட்டு என்ற இடத்தில் இணைப்பு சாலை அருகே கனமழை காரணமாக திடீரென பாறை சரிந்து சாலையில் விழுந்தது.
எனினும், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தாலும் அவ்வழியே செல்லும் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும், பாறை விழுந்ததில் 3 வளைவுகளில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 2வது மலைப்பாதையில் சுமார் 5 கிமீ- க்கு வாகனங்கள் ஆங்காங்கே காத்து கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சாலை சேதத்தை சீர் செய்வதற்கு 2வது மலைப் பாதையை தேவஸ்தானம் அதிகாரிகள் மூடியுள்ளனர். பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் 10-15 நாட்களுக்கு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.