கொல்கத்தா:-
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனாஷ் கோஷ் மரணமடைந்தார்.
மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் (60) மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்பட்டது.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலிருந்து ஃபால்டா (Falta) தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ். கோஷ் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 1998 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் கோஷ்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில்:-
மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்காவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தாமோனாஷ் நிரப்ப முடியாத ஒர் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜார்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மம்தா கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸால் சென்னையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.