லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 3 வீரர்களில் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடுக்களூரை பூர்வீகமாக கொண்டவர் பழனி. இவர் கழுகூரணி கஜினி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் 18 வயதில் சேர்ந்த பழனி, ஹவில்தாராக லடாக் எல்லையில் பணிபுரிந்து வந்தார். பழனிக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா, திவ்யா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.
பழனியின் தம்பி இதயக்கனி என்பவர் ராணுவத்தில் அலுவலக உதவியாளராக ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தான் சீன ராணுவத்தின் தாக்குதலில் பழனி உயிரிழந்த செய்தி முதலில் தெரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பழனி, இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெற இருந்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்துள்ளார்.