தூத்துக்குடி:-
தூத்துக்குடி வஉசி துறைமுகம் 72.40 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய காற்றாலை இறகை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை அருகேயுள்ள மாப்பேடு என்ற இடத்தில் இருந்து 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு பிரத்யேக லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் துறைமுகத்தின் 3-வது கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.வி.மரியா’ என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டது. எம்.வி.மரியா கப்பல் 151.67 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
கப்பலில் உள்ள 3 ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம், இந்த ராட்சத இறகு கப்பலில் ஏற்றப்பட்டது.
இந்த இறகு மற்றும் காற்றாலை உதிரி பாகங்களை திருவள்ளுரில் உள்ள நோர்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ஜெர்மனியில் உள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி ஜிஎம்பிஎச் என்ற நிறுவனத்திற்காக பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் (Antwerp) துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது.
இக்கப்பலின் சரக்கு கையாளுபவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆஸ்பின்வால் அன் கோ லிட். (Aspinwall And Company Ltd), தூத்துக்குடி ஆவர்.
இந்த காற்றாலை இறகுகினை சென்னை அருகாமையிலுள்ள மாப்பேடு என்ற இடத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்தியோக லாரிகள் மூலம் நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் எடுத்து வந்தார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன், காற்றாலை உதிரிபாகங்களை கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளையும் துறைமுகத்தில் அமையபெற்றுள்ளது என்று கூறினார்.
மேலும் சாகர்மாலா திட்டத்தின்கீழ் வ.உ.சிதம்பரனார் துறைமுக நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக டீயூட்டிகோரின் ஸ்பீட்ஸ் (Tuticorin SPEEDZ (Smart Port Employment and Economic Development Zone)) என்ற திட்டத்தின் மூலம் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான 1000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம்பெறுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தையில் விநியோகம் செய்யலாம் என்று கூறினார்.