கோரக்பூர்:-
காசியாபாத்தில் உள்ள ஒருவர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்ல டிக்கெட் கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கார் வாங்கி ஊருக்குச் சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் (Ghaziabad) பெயிண்டராக வேலை செய்து வருபவர் லல்லன் (Lallan). இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்ல மூன்று நாட்கள் ரயில் நிலையத்திலேயே காத்திருந்து டிக்கெட் பெற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், டிக்கெட் கிடைக்காத நிலையில் வேறுவழியின்றி தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 1,90,000 எடுத்து ரூ.1,50,000 செலவில் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர் தனது குடும்பத்தினருடன் காரில் சொந்த ஊரான கோரக்பூருக்குச் சென்றுள்ளார். மேலும் தான் ஒருபோதும் காசியாபாத்திற்கு திரும்பி வரப்போவதில்லை என்றும் கூறினார்.
நல்லன் உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் (Gorakhpur) மாவட்டம் பிபி கஞ்ச் (PP Ganj) பகுதி அருகே கைதோலியா (Kaitholia) கிராமத்தைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து பெயிண்டர் லல்லன் கூறுகையில்:-
ஊரடங்கு ஒரு சில வாரங்களில் சரியாகும், விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்று நினைத்தேன். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் கிராமத்திற்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று நினைத்தேன். இருப்பினும், பேருந்துகள் அல்லது ரயில்களில் இடங்களைப் பெற நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
பேருந்துகளில் மிகவும் கூட்டமாக இருந்ததால், எனது குடும்பத்தினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் ஒரு கார் வாங்க முடிவு செய்தேன். எனது சேமிப்பு அனைத்தையும் இதில் நான் செலவிட்டுவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் தற்போது எனது குடும்பம் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த மே 29-ஆம் தேதி காசியாபாத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில் கிளம்பிய லல்லன் 14 மணி நேர பயணத்திற்கு பிறகு தனது சொந்த கிராமத்தை வந்தடைந்தனர் அதன்பின்னர் லல்லன் குடும்பத்தினர் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோரக்பூரிலேயே புதிதாக வேலையை தொடங்க உள்ளதாக லல்லன் கூறியுள்ளார்.