உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் நகரில் அடையாளம் தெரியாத மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 32 பேர் குழந்தைகள். மேலும் 186 பேர் இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் குழந்தைகளாவர்.
இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், அதை டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கும் இந்த மர்ம காய்ச்சலுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் டெங்கு தடுப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுவதைத் தொடர்ந்து ஆக்ரா, மெயின்புரி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேலும், ஃபிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஃபிரோசாபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை, 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.