மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.க நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும் அவர், மராட்டிய அரசியல் கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார்.
மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று மம்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பானர்ஜி அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடியுள்ளதாகவும், பின்னர் எழுந்து நின்று பாடலை பாடியதுடன் அதை பாதியில் நிறுத்தி விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை பா.ஜ.க தலைவர் ஒருவர் மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தேசிய கீதத்திற்கு முற்றிலும் அவமரியாதை அளிக்கும் விதமாக நடந்து கொண்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,
நமது தேசிய கீதம் நம் தேசத்தின் அடையாளம். பொது பதவியில் இருப்பவர்களால் அதை இழிவுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், உட்கார்ந்து கொண்டே தேசிய கீதம் பாடி அவமரியாதை செய்வதா; இருந்தாலும் தீதிக்கு இவ்வளவு தலைகனம் கூடாது என்று நெட்டிசன்கள், மேற்கு வங்க பா.ஜ.க தலைவர், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மம்தா பானர்ஜியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.