புது டெல்லி
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது மத்திய மாநில அரசுகள்ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வருகின்றன.
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குபவர்களுக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது வழங்கப்படும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிவித்திருந்தார்.
சிறந்த கண்டுபிடிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா சுமார் ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. 2021 ம் ஆண்டுக்குரிய சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கு இதுவரை 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.
இறுதி போட்டிக்கான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இடம்பெற்றுள்ளார்.
வினிஷா உமாசங்கர் சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி உள்ளார்.
சுமார் ரூபாய் 40000 செலவில் உருவாக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தியில் இயங்கும் வண்டியால், கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது குற்பியிடத்தக்கது.
சோலார் மின்சக்தியில் இயங்கும் வண்டியை உருவாக்கியதன் மூலம் வினிஷா உமாசங்கர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார்.
இறுதி போட்டிகள் இங்கிலாந்தில் லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வரும் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினிஷா உமாசங்கர்ப் போன்று டெல்லியை சேர்ந்த வித்யுத் மோகன் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார்.
டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் வித்யுத் மோகனின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. எனவே வித்யுத் மோகன் படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது.
இறுதி போட்டிகள் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் மற்றும் புது டெல்லியைச் சேர்ந்த வித்யுத் மோகன் இருவரும் காணொளி மூலம் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.