கேரளா:
கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் பிறந்த டி.என்.கிருஷ்ணன் தனது இளம்வயதில் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். சிறு வயது முதலே வயலின் இசை மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் இசைப் பயிற்சி பெற்றார்.
இளம் வயதிலேயே புகழ் வாய்ந்த பாடகர்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.டி.ராமநாதன், ஆலத்தூர் சகோதரர்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அதன் பின்னர் தனியாக வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதனிடையே, சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலைப் பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். இவரது சாதனையை பாராட்டி 2006-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமி விருது அளிக்கப்பட்டது.
மேலும் சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு மத்திய அரசு “பத்மவிபூஷண்’ விருது அளித்து கௌரவப்படுத்தியது.
இந்த நிலையில் டி.என். கிருஷ்ணன் கடந்த சில காலமாக வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.