மாஸ்கோ:-
வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அசாமில் கோரத்தாண்டவம் ஆடும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு மிகவும் திண்டாடி வருகிறது. இதுவரை அசாமில் ஏற்பட்ட பேரழிவால் வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை சேர்ந்த 26 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அசாமில் 2 ஆயிரத்து 525 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு தூதரகம் வாயிலாக தெரிவித்துள்ளதாவது:-
இந்தியாவில் வட மாநிலங்களில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதனிடையே பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே கண்டி (Kanti) பகுதியில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை NH27 அருகே கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையை (National Disaster Response Force (NDRF)) சேர்ந்த 19 குழுவினர் மீட்பு பணிகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மீட்பு படை உதவி இயக்குனர் சத்ய பிரதான் தெரிவித்தார்.