காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு ஆகாது என்றும் இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.
இந்நிலையில், ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்றுப் பேசிய போது, பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகிறோம் என்றும் கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றும் இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது என்றும் போரில் இரண்டு நாடுகளுக்குமே விருப்பம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் நிரந்தமரான அமைதியையே விரும்புகிறோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.