சீன உளவு கப்பலால் இந்தியாவின் நலன்களில் ஏற்படும் தாக்கம் குறித்து உன்னிப்பாக கண்காணிப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பாங்காங்கில் உள்ள சீன உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’ இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்த நிலையில் அந்த கப்பல் மூலம் 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுவதால் கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டதையடுத்து கடந்த 11ஆம் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16ஆம் தேதி வந்தடைந்தது.
இந்நிலையில் இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளையும் இலங்கை அரசு விதித்து இருப்பதாக தெரிகிறது. மேலும் 22ஆம் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம் என்றும் இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம்.என்றும் அவர் கூறினார்.