புதுடில்லி:-
நேற்று அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதற்கு பதிலாக, ‘ஜெய் சியா ராம்’ என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நேற்று, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி:-
வழக்கமாக கூறும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் சியா ராம்’ எனக் குறிப்பிட்டார். மேலும்,’நாம் அனைவரும் ராமரையும் மாதா ஜானகியையும் நினைவு கூறவேண்டும். எல்லோரும் சேர்ந்து கூறுவோம், ஜெய் சியா ராம்’ என்றார்.
இப்போதும் இல்லாமல் இந்த முறையை மோடி இப்படி வித்தியாசமாக ‘ஜெய் சியா ராம்’ குறிப்பிட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
பின்னணி:-
ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அயோத்தி பிரச்சனை துவங்கிய 1984ம் ஆண்டில் இருந்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் மக்கள் மத்தியில் பிரபலம். இந்து அமைப்புகள் அனைத்தும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்தை மட்டுமே பயன்படுத்தினர்.
அதிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏதோ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் பிஜேபிக்கு மட்டுமே உரியது என்பதை போன்று தொடர்ந்து இந்த கோஷத்தை பிரபலப்படுத்தி வந்தார்கள்.
பாலகங்காதர திலகர் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியதை போன்று பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் எதற்கெடுத்தாலும் ‘ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்’ என்றே முழங்கி வந்தார்கள்.
இப்படி இருக்கையில், பிரதமர் மோடி திடீரென ‘ஜெய் சியா ராம்’ என்று, ஏன் குறிப்பட்டார். அந்த முழக்கத்தின் அர்த்தம் என்ன? இவ்வாறு முழங்க காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.
‘ஜெய் சியா ராம்’ கோஷத்திற்கான விளக்கங்கள்:-
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது ஒரு போர் முழக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிரானது, இந்த ‘ஜெய் சியா ராம்’. ஆம், ஜெய் சியா ராம் என்பது அன்பை வெளிப்படுத்து கோஷம்.
ஜெய் ஸ்ரீ ராம் என்பது மிகவும் வலுவான, ஆக்ரோஷமான கோஷம். சண்டை, வீரம், வலிமை ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த கோஷம் எழுப்பப்படும். முற்காலங்களில் போருக்கு கிளம்பும் முன் மன்னர்கள் எவ்வாறு ‘ஹர ஹர மகாதேவா’ என்ற கோஷத்தை எழுப்பினார்களோ, அதே போன்றது தான் இந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமும்.
மேலும் ஜெய் ஸ்ரீ ராம் என்பதில் சீதைதேவியின் பெயர் இல்லை. ஆனால் ஜெய் சியா ராம் என்பதில் சீதை உள்ளார் இக்கோஷம் அவரையும் போற்றும். எனவே அவரையும் போற்றும் வகையில் ஜெய் சியா ராம் உள்ளது. இதனால், ஜெய் சியா ராம் என்ற அன்பையும், அர்பணிப்பையும், ஒற்றுமையையும் குறிக்கும் கோஷத்தை பிரதமர் மோடி பயன்படுத்தினார்.
இதனிடையே, ‘ஜெய் ஸ்ரீ ராமில் இருக்கும் “ஸ்ரீ” என்பதே சீதைதேவியை தான் குறிக்கும். இந்த, ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் சியா ராம் இரண்டுமே ராமரை புகழும் கோஷம்தான். இரண்டு கோஷத்திற்கும் எந்தஸ்ரீவேறுபாடு இல்லை’ என சிலர் கூறுகின்றனர்.
மொத்தத்தில், அயோத்தியில் ராமர் கோவில் அமையப் பெற்று விட்டது எனவே இனி “வீரம் வேண்டாம்”; “அன்பே போதும்’ என்பதைக் குறிக்கவே இந்த கோஷத்தை மோடி முழங்கியுள்ளார்.
தற்போது, அயோத்தி விவகாரம் சுமுகமாக முடிந்துள்ளது. எனவே இனி சண்டை, வீரத்தைக் குறிக்கும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் தேவையில்லை.
மேலும், நாட்டிற்கு இனி முக்கியம் வளர்ச்சியே, அதற்கு சகோதரத்துவமும், அன்பும் முக்கியம். அதை உணர்த்தும் விதமாக, பிரதமர் மோடி, ‘ஜெய் சியா ராம்’ கோஷத்தை முன்வைத்திருக்கலாம். ஒருவேளை பிரதமர் மோடி பசு, ராமர் போன்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த ஜெய் சியா ராம் கோஷத்தை முன் வைத்து இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.