நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த ஜூன் 7ம் தேதி குழந்தையை பிரசவித்தார் என்றும் தற்போது நலமாக உள்ளர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது கேரள அரசு.
சரி ஜிகா வைரஸ் என்றால் என்ன
1947ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் உள்ள ஜிகா காடுகளில் கண்டறியப்பட்டதால் ஜிகா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
1947ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டாலும் கடந்த 2015ஆம் ஆண்டு பிரேசிலில் பரவியபோது தான் இந்த வைரஸ் குறித்து உலகம் முழுவதும் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
எவ்வாறு பரவுகிறது ஜிகா
ஜிகா வைரஸ், ஏடிஸ் என்ற கொசுவால் பரவக்கூடியது. டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் தான் இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது.
ஏடிஸ் கொசு நம்முடைய உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது, வைரஸை உள்ளே செலுத்தி விடும்.
இந்த ஏடிஸ் கொசு, நன்னீரில் வாழ கூடியது, டெங்கு வைரஸுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மஞ்சள் காய்ச்சல் இதன் மூலம் பரவும்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும், பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கர்ப்பிணிப்பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம்.
மேலும், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டாலும் இந்த வைரஸ் பரவும்.
பொதுவாக வெப்பம் அதிகம் உள்ள, பகுதிகளில் ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவு தான் , என்றாலும் மழைக்காலங்களில் அதிகம் பரவ கூடியது.
ஜிகா வைரசால் ஏற்படும் பாதிப்புகள்
ஜிகா வைரஸ் தொற்றால் கீலன்-பார் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. கீலன்-பார் சிண்ட்ரோம் என்பது நரம்பு மண்டலத்தை தாக்கும் கடுமையான நோயாகும், இதில் ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நரம்பு செல்களை சேதப்படுத்துகிறது, இதனால் தசை பலவீனம் அடைந்து, சில சமயங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களில், இது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், கர்ப்பிணி பெண்கள் ஜிகா தொற்றுக்கு ஆளவாதால் வயிற்றில் இருக்கும் சிசுக்களின் மூளை கடுமையாக பாதிப்படைகிறது.
ஜிகா ஏற்படும் ஒரு தீவிர பிறப்பு குறைபாடு மைக்ரோசெபலி எனப்படுகிறது. மைக்ரோசெபாலி என்றால் ஒரு குழந்தையின் மூளை மற்றும் மண்டை ஓடு சரியாக வளரவில்லை என்று அர்த்தம். இதனால் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையோடு பிறக்கும்.
தடுக்கும் முறைகள்
ஜிகா வைரஸை குணப்படுத்துவதற்கென்று எந்த வித மருத்துவ முறையும் சிகிச்சையும் கிடையாது. முக்கியமாக ஜிகா வைரஸுக்கும் இதுவரை எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜிகாவால் பாதிக்கபட்டால் அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
கொசுக்கடிகளை தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க முடியும். குறிப்பாக கர்ப்பணிப் பெண்கள், குழந்தைகள், வயதுக்கு வரும் நிலையில் இருக்கும் பெண் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து காக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவும், சூழலில் ஜிகா வைரஸ் தொற்று பரவுவதன் மூலம் நாட்டின் காதார பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.