அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரியகிரகணம் ஏற்பட உள்ளது.சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு “சூரிய கிரகணம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அமாவாசை நாட்களில் தான் சூரிய கிரகணம் ஏற்படும்.
அப்போது பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு “முழு சூரிய கிரகணம்” என்று பெயர். சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு “வளைய சூரிய கிரகணம்” அல்லது “கங்கண சூரிய கிரகணம்” என்று அழைக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டின் சூரிய கிரகணம் ஜூன் 10-ம் தேதி நிகழ்கிறது. இது கங்கண சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இங்குள்ளவர்களுக்கு தோஷம் ஏற்படாது எனவே எந்த ராசி நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாளிலும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியும் நிகழ்ந்தது.இந்த சூரிய கிரகணமானது 23-38 வடக்கு அக்ஷாம்சம், 44-00 மேற்கு ரேகாம்சம் அமைந்துள்ள இடத்தில் பிற்பகல் இந்திய நேரப்படி 01:42:19 மணிக்கு ஆரம்பமாகிறது மாலை 06:40:54 மணிக்கு 41-26 வடக்கு அக்ஷாம்சம்,94-20 கிழக்கு ரேகாம்சம் உள்ள பகுதியில் சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதில் எந்த இடத்திலும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. எனவே, இந்த கிரகணம் இந்தியாவில் எந்த பகுதியிலும் தெரியாது.
இந்த கிரகணம் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கங்கண சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகண நிகழ்வு பிற்பகல் 01:42 மணிக்கு தொடங்கி மாலை 06:41வரை நீடிக்கும்.