இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வேலி மற்றும் புதர்களில் வளரும். குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஒரு கொடித் தாவரம் ஆகும். இதன் அறிவியற் பெயர் ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் இதனை விநாயகர் சதுர்த்தித் திருநாளில், நம் வீட்டிற்கு வாங்கி வரும் களிமண் பிள்ளையாரின் கண்களாகக் வைக்கப்படுவது இந்தக் குன்றிமணிகளே.
நம் ஊரில் காலம் காலமாக எடை அளக்க குன்றிமணி தான் எடைக்கல். ஒரு குன்றி மணிக்கு இணையான அளவு கொண்ட தங்கமே குண்டுமணி தங்கம் என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டது.
2 குன்றிமணி எடை என்பது இப்போது சுமார் 1 கிராம் எடையைக் குறிக்கும்.
இவை பொதுவாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவற்றில் ஐந்து வகைகள் உள்ளன. அவை வெண்மை குன்றுமணி, செம்மை குன்றுமணி, மஞ்சள் குன்றுமணி, நீல குன்றுமணி, கருமை குன்றுமணி.
பொதுவாக முத்து, பவளம் போல இந்த மணியை ஆபரணங்களில் பயன்படுத்துவார்கள்.
இதனை பெண்கள் கழுத்து அணிகலன்களில் மற்றும் தங்கச் சங்கிலி, நெக்லஸ், முத்து மாலை போன்ற ஆபரணங்களில் அழகுக்காக, குன்றிமணிகளைக் கோர்த்திருப்பார்கள்.
அதேபோல் இந்த குன்றிமணியை பொடி செய்து, அதனுடன் சிறிது வெந்தய பொடி சேர்த்து ஒரு வாரத்திற்கு நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை தினமும் தலையில் தேய்த்து வர நன்கு முடி வளரும்.
குன்றிமணி இலைகளின் கசாயமானது இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும். மேலும் இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து உடலில் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வடியும். அதுமட்டுமின்றி வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை குன்றிமணி இலைகள் சிறந்த தீர்வு அளிக்கும்.
குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் என்னை மிகுந்த மணம் உடையதாக இருக்கும். இதனால் பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் குன்றிமணி எண்ணெய் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
நிறைய மருத்துவ பயன்கள் இருந்தாலும் ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றி மணி போதுமானது. உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.
ஆனால், இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த குன்றி மணியை கடிக்காமல் அப்படியே விழுங்கினால் ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும். விஷமும் நம்மைத் தாக்காது. கடித்து விழுங்கினால் அவ்வளவுதான்.