தற்போதைய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகிலுள்ள லட்சுமி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உயர்ந்த நோக்கத்தை கொண்ட மாமனிதர் பி.வி.துரைராஜ்.
மிகுந்த செல்வ செழிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் இந்த மாமனிதர். மார்க்சிய கொள்கை பிடிப்பு கொண்டவர் மிகவும் கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வந்தவர்.
தன்னுடைய வருங்கால சந்ததியினர் சிரமப்படக் கூடாது என்ற அடிப்படையில் 70 ஆண்டுகளுக்கு முன்பே தாம் வசித்து வந்த லட்சுமி நாயக்கன்பட்டி கிராமத்தில் “மக்கள் நூலகம் ” என்ற நூலகத்தை அமைத்த பெரியவர்.
1962 ஆம் ஆண்டு போடி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் கண்டவர். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தால் உங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறி இவருக்கு ஆதரவு கேட்டனர். ஆனால் நான் பணம் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உறுதியான நேர்மையான முடிவை எடுத்தார். ஆகவே 567 ஓட்டு வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தவர் தான் கொள்கை பிடிப்பாளர் பி.வி.துரைராஜ்.பின்னாட்களில் மதுரைக்கு குடிபெயர்ந்து சிந்தனையாளர்களை உருவாக்க உதவும் பி.வி.டி. அறக்கட்டளையை தோற்றுவித்து அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவியை வழங்க ஏற்பாடு செய்தார்.
அவரது சிந்தனையில் உருவானதுதான் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகம், போடிநாயக்கனூரில் உள்ள லெனின் நூலகம் மற்றும் லட்சுமி நாயக்கன்பட்டியில் உள்ள லெனின் நூலகம் ஆகிய 3 நூலகங்கள் ஆகும்.
மதுரையிலும், போடியிலும் உள்ள நூலகங்களில் மாணவர்கள் உடல்நலம் பேணி திடகாத்திரமாக இருக்க, கராத்தே பயிற்சி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். நடப்பு அரசியலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவ்வப்போது வழங்கிய பெரியவர் தான் பி.வி.துரைராஜ்.ட்ராட்ஸ்கிய நூல்களைப் படித்ததன் மூலம் டிராஸ்கிய இயக்கத்தோடு நெருக்கமாக இருந்து “ட்ராட்ஸ்கி” குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் கொண்டு வந்தார்.
மூன்று நூலகங்களுக்கும் தனது செலவிலேயே சொந்தமாக கட்டிடங்கள் கட்டி நிரந்தரமாக எந்தவித உதவியும் இன்றி செயல்படுத்துவதற்கு அச்சாணி இட்டவர் பி.வி.துரைராஜ்.
இந்த மூன்று நூலகங்களும் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனது தந்தையின் (கே. முத்துசாமி) தாய் மாமா தான் பி.வி.துரைராஜ். அந்த நூலக தாத்தா தான் பி.வி.துரைராஜ் ஆவார்.
-தொடரும்